ரசிகன்!



எல்லாமும்
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!

அணையப்பட்ட விளக்கு
ஏற்றப்பட்டிருக்கும் இவ்வேளை

என்னில் கொஞ்சியதைப்போலவே
வாழ்வை தொடங்கியிருக்கக்கூடும் அவள்!

கடவுள் இருந்திருப்பதாக
பலமுறை வேண்டியிருக்கிறாள்...
நீ,
நான்,
நம் குழந்தை
என ஒரு உலகுக்காக!

நிராகரிக்கப்பட்டது!
பதில்- ஆதாம் ஏவாளுக்கு காவு விடப்பட்டிருக்கும்!

இனிவரும்
உணர்வுகளோ , வார்த்தைகளோ
ஆபாசமானதாகவும்
வன்மையாகவுமே இருக்கக்கூடும்!

நானும்
சராசரி மனிதன் தானே?
திடப்படுத்திய மனதுடன்
புள்ளி வைக்கிறேன்!

உங்களில் யாரேனும்
காதலியை தாரை வார்த்திருக்கக்கூடும்!
என்னால் தொடர முடியாத
இக்கவிதையை
நீங்கள் முடித்து வையுங்கள்...

என் மௌனம்..
என் தனிமை..
எனக்காக காத்திருக்கிறது!

*
நன்றி!
வார்ப்பு

http://vaarppu.com/view/2285/



*
ரசிகன்!


உங்கள்
எவரையும் போல் நானில்லை!
ஒரு நட்பு மட்டுமல்ல...
ஒரு காதலையும் தொலைத்தவன்..
என்னையும் தான்!

என்னைப்போல
நீங்களும்
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...
என்ன ஒன்று...
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ
உங்களிடம் நீங்கள் இல்லை!

இப்படியான நினைவுகளை விட
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்
நிச்சயம்
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!

நிழலை
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்
பேய் என படரும்
அவள் நினைவுகள்
இம்மனித பிசாசை
தூங்க விடப்போவதில்லை...

அவளின்
தீரா தாக நினைவுகள் பட்டு
தெறிக்கிறது என் மௌனம்...
ஒன்று கவிதையாகி விட்டது!
மற்றவை அனாதையாகி விட்டது!

-ரசிகன்

நன்றி,
வார்ப்பு!
*
http://vaarppu.com/view/2285/


*
ரசிகன்!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்கிறது!


காலை நடந்தேறிவிட்டதொரு

சுப காரியத்தில்

என்னில் ஒரு பாதியை

அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது!


அர்ச்சதைகளும்

மேள தாளங்களும்

என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன

இந்த முழு பொழுதையும்...


கடந்து போன இரவுகளை விட

இவ்விரவு

சற்றே அசௌகரியமாய் அரங்கேறுகிறது...


மின் விசிறியின் சுழற்சிக்கு

முதல் காதல்

தாக்கு பிடிக்க இயலாது

தலை சுற்றி கொண்டிருக்கிறது....


தேகம் தவிர்த்து

உயிர் முழுதும் காதலித்த தருணங்கள்

அழ தொடங்குகின்றன...


வேண்டாம்..

இனி அழுது என்ன ஆகப்போகிறது?

என்னையே தேற்றி கொள்கிறேன்...


பயனிருப்பதான அறிகுறியில்லை...


இதயத்துடிப்பு அதிகரிக்கிறது...

வார்த்தைகளை பிடித்திழுக்கிறேன்...


உடல் வியர்க்கிறது...

நினைவுகளை அழுத்தி வைக்கிறேன்!


சாத்தப்பட்ட கதவுகளில்

பயம் தொற்றிக்கொள்வதும்


ஜன்னல் திரை மறைவில்

புழுக்கம் உளருவதுமாய்....


தனிமை கையோங்கிட

ஒரு வித

நடுக்கத்திலேயே இமைகள் அடைக்கிறேன்...!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்ந்து கொள்கிறது!


-

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101712&format=html

*
ரசிகன்!


என் தாய் மொழி தமிழ்...
ஆங்கில வழியில் பயின்றவன்! பயின்று கொண்டிருப்பவன்!
தமிழை சுவாசிப்பவன் அல்ல! நேசிப்பவன்!

இன்று காலை... என் முகநூலில் (FACEBOOK) தகவல் பெட்டிக்கு ஒரு தகவல் வந்திருந்தது...
என் நட்பு வட்டாரத்தில் ஒருவர்.. அவரை பற்றி முழுமையாக தெரியாது...
ஒரு கவிஞர் , எழுத்தாளர் என்றளவில் மட்டும் தெரியும்... அவரை மதிக்கிறேன்! அவரிடமிருந்து தான் அச்செய்தி

வந்த செய்தி:
--------------
(NO EDIT! ONLY CUT , COPY & PASTE)

"உங்களை மாதிரி இடியட் இன்டியன் சிலரால் தான் தமிழே சாகுது. நாங்கள் தமிழை வளக்கிறம். நிங்களோ கவிதை மட்டும் தமிழில் எழுதிப்போட்டு மிச்சமெல்லாத்தையும் ஆங்கிலத்தமிலில் பதிலா. ஏன?; இப்படி கிறுக்குத்தனமா செய்து தமிழை மட்டுமல் எங்களையும் கொல்லுறியள். ஓ நானும் இடியட் இன்டியன் என தமிழில் எழுதினேனா. அப்பிடிச்சொன்னாத்தானே உங்களுக்கெல்லாம் புரியுது.அது தான். உங்களை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீங்கிக்கொள்கிறேன்."


கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது... இருந்தும் என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்!

* நான் தமிழ் வளர்ப்பவன் அல்ல!
* நான் ஆங்கிலம் எதிர்ப்பவன் அல்ல!

எனக்கு தமிழ் முழுமையாய் தெரியாது... படித்த/தெரிந்த/புரிந்த/அறிந்த தமிழை கொண்டு கவிதை என்ற பெயரில் (கவிதை இல்லை) வார்த்தைகளை கோர்த்து விடுகிறேன்! அவ்வளவே!

நான் தமிழை எதிர்ப்பவன் போலவும்... கொலை செய்பவன் போலவும் எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்கள்!

அதெல்லாம் விடுங்க!
நான் என்ன சொல்ல வரேன்னா...

பின்னூட்டத்திலோ / அல்லது வேறேனும் இடத்திலோ நான் ஆங்கிலம் உபயோகித்தல் பிடிக்காதிருக்கும் பட்சத்தில் தாங்களே என்னை நீக்கிக்கொள்ளலாம்!
தமிழை கொலை செய்யும் நோக்கம் எதுவும் இதுவரை இல்லை... நீங்கள் வந்திருப்பதாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :)
உங்களின் கண்டிப்போ/தண்டிப்போ/நீக்குதலோ என்னை எதுவும் செய்யப்போவதில்லை!

நான் நீங்கள் இல்லை! உங்களைப்போல் இல்லை!

இது என் விருப்பமாகவும் இருக்கலாம்... நிர்ப்பந்தமாகவும் இருக்கலாம்!

பி.கு : ஏதேனும் தவறாகவோ / மரியாதை குறைவாகவோ / தமிழை இழிவாகவோ பேசியிருந்தால்... இச்சிறுவனை மன்னிக்கவும்!

நன்றி,
ரசிகன்

*
ரசிகன்!




ஜன்னலோர பேருந்தின்

பயணத் தருவாயில்...

கடந்து செல்லும்

ரோஸ் கலர் சட்டை

பள்ளிக் குழந்தை

சிரித்து கைகாட்ட கூடும்..

அருகில் அமரலாமா என

வெள்ளை சுடிதார்
கல்லூரித் தாரகை

அனுமதி கோரக்கூடும்...

கூட்ட நெரிசலில்

சாலையோர மரங்களோ

குலுங்கும் செம்மஞ்சள் பூக்களோ

அவசரத்தில் வழியனுப்பி வைக்கக்கூடும்!

சில்லென்று காற்று

கூடவே அழைத்து வரும்

ஒருசில மழைத் துளிகளை

முகம் தூறக்கூடும்!

பயண தூரமும்

மனதின் துயரமும்

எந்தவொரு பாரமின்றி

அவ்வளவு சாதாரணமாய் இருந்திருக்கிறது!

நொடிப்பொழுதில்

ஒரு சின்ன களைப்போடு

இடிபாடுகளில் சிக்கி

வெளிவருகையில் தான்

அசம்பாவிதங்கள்

நினைவுக்கு வந்து செல்கின்றன!


-ரசிகன்

நன்றி
திண்ணை!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101014&format=html
ரசிகன்!




எனக்கென்ன அவசியப்படுகிறதென

யோசித்ததைக்காட்டிலும்

பெருமளவு நேரங்கள்

அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன!


என்னை

அவளுக்கு பிடிப்பதை காட்டிலும்

அவளுக்கென்ன பிடிக்கும்,

பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில்

இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல!


அடங்கா பசியென

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருக்கிறேன்!


மௌனம்

அவளுக்கு புரிவதாக இல்லை...

அவளினத்து மலர்களும் அரியணை ஏறுவதாயில்லை...

கவிதைகள் காகிதத்தின் படி தாண்டுவதில்லை...


நிறைவு பெறாத விழாவின்

நன்றியுரை மட்டும் எனக்கு!


இனி என் விருப்பங்கள்

கனவுகளினேனும் திணிக்கப்படட்டும்...


பிரசுவிக்கப்படாத காதல்

காத்திருப்பில் நிற்க


அவளை பார்த்த பார்வையிலேயே

நின்று கொண்டிருக்கிறேன்...


இன்றோடு

எண்ணி 675 -ஆம் நாள்!



- ரசிகன்

**************

நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310100213&format=html
*