ரசிகன்!


எவருக்கும்
பதில் சொல்ல வாய்க்காத
கேள்வியொன்றில்
மௌனமாகவே விடை பெறுவதில்
எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை...

காதல் கூடாரத்தை
அனாதையாக்கும் காதலிகள்
கொஞ்சம் நினைவு,
கொஞ்சம் தனிமை,
கொஞ்சம் கூடுதலான
மௌனத்தை மட்டுமே
பரிசளித்துப் போகக் கூடும்!

பேரிரைச்சலின்
ஒரு நீள சாலையில்
முகவரி கேட்கும்
எப்பருவப்பெண்ணிடமும்
மௌனத்தின் விலாசத்தை
சொல்லி நகர்கிறேன்!

அறையை அடைந்ததும்
பரவிக் கிடக்கும்
தனிமை நாற்றத்தை
மௌனங்கள் மட்டுமே
ரசித்து நுகர்வதுண்டு...

ஒரு தற்காலிக உலகில்
மீள்வருகைக்கான
சாத்தியக்கூறுகள்
தென்படும்வரையில்....

மௌனத்தோடு
கை குலுக்கிக்கொள்வதில்
எந்த சிரமமும் இல்லை எனக்கு!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311021317&format=html
0 Responses

Post a Comment